ஞாயிறு, 8 மார்ச், 2009

கம்பன் அடிப்பொடி அவர்களின் தமிழ்த்தாய் கோயில்


மொழியைத் தாயாக மதிப்பவர்கள் தமிழர்கள். மதுரையில் தமிழன்னைக்கு சிலை கூட நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தமிழ்த் தாய்க்கு ஒரு கோவிலையும்கட்டி தெய்வமாக்கி வழிபட்டு வருகிறார்கள் செட்டி நாட்டுக்காரர்கள்.செட்டி நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள காரைக்குடிக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலக மகா கவிஞன் கம்பனுக்கு விழா எடுத்த முதல்ஊர் காரைக்குடிதான்.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மக நாள் தொடங்கி, தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறும் கம்பன் விழாவில் பங்கு பெறாதசொற்பொழிவாளர்களோ, தமிழறிஞர்களோ இல்லை எனும் அளவுக்கு காரைக்குடி கம்பன் விழா சிறப்புடையது.தமிழ் இலக்கியங்களில் காரைக்குடியின் ஒரு பகுதியான கழனிவாசல் குறிப்பிடப் பெற்றுள்ளது. கழனிவாசல் பகுதியில் ஏழகப்படை செயல்பட்டதாகக்குறிப்புகள் உள்ளன. கழனிவாசல் பகுதியில் உள்ள வைணவத் திருக்கோயில் ஏழகம்பெருமாள் என்று இப்போதும் வழங்கப்படுகிறது.உலகத்திலேயே முதன் முதலாக மொழியைத் தெய்வமாக்கி, கோவில் அமைக்கும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவிய கம்பன் "அடிப்பொடி"சா. கணேசன் அவர்களுக்கு உதித்தது. அதன் பயனாக இன்று தமிழ்த் தாய் கோவில் காரைக்குடியில் தலை நிமிர்ந்து நிற்கிறது.


கம்பன் மணி மண்டபத்தின் வலதுபுறத்தில் வடக்கு நோக்கியவாறு தமிழ்த் தாய்க் கோவில் அமைந்துள்ளது.மும்முனை நிலத்தில் ஆறுபட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோவிலாக அமைந்துள்ளது.தமிழ்த் தாய்க் கோவிலின் பரிவார தெய்வங்களாக, வட கீழ் கோடியில் வள்ளுவரும், தென் கோடியில்இளங்கோவடிகளும், வட மேல் கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர்.தமிழ்த் தாய்க் கோவிலின் நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகியராக நிறுவப்பெற்றிருக்கின்றனர்.கருவறையில் தமிழ்த் தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில்காணப்படுகின்றனர்.
கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறாள்.வலது முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உத்திராட்ச மாலையும், கீழ்இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன.சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில்,அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த் தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில்பொறிக்கப்பட்டுள்ளன.
வலது கால் கீழே தொங்கியவாறும், இடது கால் மடித்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள்.தமிழ்த்தாயின் கால்களைச் சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன.நடராஜ மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச்செறிவும் உடையது."எங்களைப் போன்ற ஸ்தபதிகளுக்கு இந்த இரு மூர்த்திகளுந்தான் அற்புதப் பொருளாக உள்ளன" என்றுவைத்தியநாத ஸ்தபதி வியந்து குறிப்பிடுகிறார்.

முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்
வழிபாட்டு முறைகள் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2001
தமிழ்த் தாயை வழிபடுவதற்கான சில முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
மலர் மாலை , நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றில் படைக்கப் பெறும். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் திருவுருவங்கட்கு எண்ணெய் சார்த்தி திருநீராட்டுச் செய்யப் பெறும். மூர்த்திகட்குத் திருநீராட்டு செய்யும் போது அதற்கென அன்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண் கலன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது (திருக்குட நீராட்டு விழா போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப் பெறும்.
தமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருவங்கட்கு ஆடை, அணிகலன், மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும்.
மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் தமிழ் தெய்வத்திற்குப் படைக்கப்படுகின்றன.
கோவில் பொது வழிபாடு நிறைவேறியதும் தேங்காய், பழம், மலர் முதலியன நறைந்த படையல் தாம்பாளத்தை வந்திருக்கும் பெருமக்களில் வயது, அனுபவம் ஆகியவற்றால் மூத்த ஒருவருக்கு (சாதி-மத-பேதமின்றி) வழங்கிய பின் யாவர்க்கும் சந்தனம், மலர், சர்க்கரை ஆகியவை அருட் பொருளாய் (பிரசாதம்) வழங்கப் பெறும்.
மூர்த்திகட்கு நீராட்டுவது (குடழுக்கு), ஆண்டு பன்னிரெண்டுக்கு மேல் போகாமல் வரையறை செய்து விட வேண்டும். எண்ணெய், பால், தயிர், இளநீர், பழச்சாறுகள், நிறுமண நீர், கங்கை, மந்திரக்கலய நீர், பன்னீர் போன்றவை திருநீராட்டுக் காலத்தில் பயன்படுத்தப் பெறும்.
மந்திரக் கலய நீரை புனித நீராக ஆக்குவதற்கு மூன்று, ஆறு, பன்னிருவர் இருந்து தமிழ்ப் பாசுரங்கள் பாடி பாராயணம் செய்ய வேண்டும். 16, 24, 32, 64, 96, 108 முறை மாறி மாறிப் பாசுரங்கள் ஓதப்படும். அத்துடன் போற்றி வணக்கம் ஓதி, மலரும் பச்சிலையும் தூவப்படும். இந்த மந்திரக் கலய நீரை மேளவாத்தியம், தீவட்டி முதலிய மரியாதையுடன் எடுத்துச் சென்று திருநீராட்டு செய்யப்படும்.
தமிழ்த் தாய் மீது, மரபுக்கேற்றவாறு புலவர் பெருமக்களைக் கொண்டு பாடல்கள் யாத்து "தமிழ்த் தாய் பிரபந்தம்"என தமிழ்த் தாய் கோவில் திறப்பின்போது நூல் வெளியிடப்பட்டது. அப்பிரபந்தப் பாடல்களை நாள்தோறும்கோவிலில் ஓதுவார் இசைக்க வழிபாடு நடைபெறுகிறது

சி. சிதம்பரம், எம்.ஏ., எம்.பில் (பி.எச்.டி),முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த் துறை,அழகப்பா பல்கலைக்கழகம்,காரைக்குடி.

கருத்துகள் இல்லை: